Sunday, August 18, 2019

சிறு, குறு நாவல்கள் – கற்றுக் கொடுத்தவை



பாலகுமாரன் பக்கங்கள் 8:


சிறு, குறு நாவல்கள்கற்றுக் கொடுத்தவை


தட்டாரப் பூச்சி :

மனுஷா இருக்கறது கொஞ்ச நாள். அதிலேயும் நல்லா முழுசா வாழறது கொஞ்ச நாள். அதையும் சிக்கலாக்கிக்கிட்டு சட்டம், மரபு சொல்லி ஆளை மழுங்க அடிச்சிட்டா நல்லதில்லையே. சந்தோஷமா வாழனும். நாலு பேரை சந்தோஷப்படுத்தனும்.



நவீன விக்கிரமாதித்தன் கதை:

காதல் என்பது விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம் சட்டென்று விட்டுக் கொடுத்தல். எந்த எதிர்பார்ப்புகளுமின்றி இருவர் ஒரே நேரத்தில் விட்டுக் கொடுத்தல். இயல்பாய் விட்டுக் கொடுத்தல். தன்னிஷ்டத்திற்கு வளைப்பது காதலாகாது. பிறர் சுமையை தான் தாங்கி தன்னை நொந்து கொள்வது காதலாகாது. நீ இதைக் கொடு, நான் இதைக் கொடுக்கிறேன் என்பதும் காதலாகாது.


கரிசனம்:

விடுதலை என்பது அனுசரித்துப் போதல், மதித்தல். பிறர் உணர்வை, உறவை இருப்பை மதித்தல்.



சேவல் பண்ணை :

பெண்கள் மாயப்பிசாசுகளாம்.  பைசாசம் இல்லாத மனூஷன் யார் ? ஜீவராசி எது ? பெண்ணிடம் மட்டுமா பைசாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது ? அடக்கி அடக்கி மனசிலிருக்கிற பைசாசத்தைக் கட்டிப் போட்டு காபந்து பண்ணிக் கொண்டிருக்கிற பொழுது கண்ணெதிரேயே கட்டை அறுத்துப் போட்டு கலவரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறவர் எத்தனை பேர் ? பர்வர்ஷன் இல்லாத மூளை எது? இதை உரக்கச் சொன்னால் அடிக்க வருவார்கள். எனக்கு இல்லையென்று பொய் சொல்லுவார்கள்.
தனக்குள் இருக்கிற பிசாசை அங்கீகரிக்கிறவர்களுக்குத்தான் பிசாசு கட்டுப்படுகிறது. அவ்வப்போது தீனி போட்டு அனுசரனையாய் இருப்பவனிடம்தான் அடங்கி இருக்கிறது.

இது ஒரு வாழ்க்கை சூட்சுமம். அப்பட்டமான நிஜம். மறுக்கிற போது பாதகம் ஏற்படும். அளவாய் அனுமதி ஆரோக்கியம்    

மேன்ஷன் ஒரு சேவல் பண்ணை. அங்கே ஒரு சேவல் கூட சந்தோஷமாய் இல்லை. அதே நேரம் எந்தச் சேவலும் கற்பிதமான கம்பீரத்தை விட்டு விடவும் முடியவில்லை.
இந்த தேசத்தில்  திருமணமாகாத முதிர்கன்னிகளுக்கு மட்டுமா பிரச்னை.

முப்பது வயது வரை நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரியத்தோடு வாழும் ஆணும் பிரச்னைதான்.



காம தகனம்:

“சினிமாவுக்கு வந்திட்டீங்க, கெட்டு போயிடாதீங்க”
“தப்புன்னு சொல்றதுன்னா சிகரெட் பிடிக்கிறேன். இதைத் தவிர வேற ஏதும் செய்யலை”
“இல்லை பாலா. தப்புன்னா சிகரெட் பிடிக்கிறது, குடிக்கிறது, பொம்பளை சமாச்சாரம் இல்லை பாலா. இதையெல்லாம் செஞ்சுட்டு யோக்கியன் மாதிரி ஏதும் செய்யாத மாதிரி நடக்கறதுதான் தப்பு பாலா”


சுக ஜீவனம் :

வாழ்க்கை சந்தோஷமாய் இருக்கிறபோது மனசு நாலா பக்கமும் அலைகிறது. கிடைத்ததை விட்டு விட்டு அது போல மாறியிருந்தால்…. இது போல நடந்திருந்தால் என்று எண்ணம் வருகிறது. தன்னை விட எல்லாம் உயர்வோ என்கிற  ஏக்கம் வருகிறது. வாழ்க்கையின் தினசரி நடவடிக்கை சரிய, கிடைத்தது போதும் என்று இறுகப் பற்றிக் கொள்கிறது. இதையும் இழந்து விடக் கூடாது என்று தவிக்கிறது. இழப்பு வர அழுகையில் முடிகிறது. பாவமன்னிப்புக் கேட்கிறது.


புத்திசாலி மனைவியை ஸ்நேகமாக்கிக் கொண்டவனுக்கு நூறு யானை பலம். எதிரியாக்கிக் கொண்டவனுக்கு ஊர் முழுவதும் பகை. அவளை எதிரியாகவும் விலக்காமல், ஸ்நேகிதியாகவும் மதிக்காமல் சும்மா கிடடி என் கூட என்று அலட்சியப்படுத்தியவனுக்கு அவளே நோய் – மெல்ல மெல்லக் கொல்லும் நோய்.

No comments:

Post a Comment