Saturday, July 17, 2021
Thursday, April 8, 2021
காதலும் காமமும்
காமத்தைக் கழுவி விட்டு
ஆறேழு வருடமாச்சு
கனவு போல் நினைவிருந்தாலும்
கைகொள்ளல் மறந்து போச்சு.
அடுத்த நாள் செலவு பேச
இரவினில் மனைவி வந்தால்
கையெட்டும் தூரத்தில்
இருப்பாளை இழுப்பதில்லை..!
காதல் மொழி பகிர்வதில்லை..!
நல்லது..
தூங்கு கணவனே இரவினில் கூடம் முழுதும்
பேய் போல அலைய வேண்டாம்.
இருமினால் வெந்நீர் அருந்து,
இறைப்பு வந்திடின் இருக்கு மருந்து
தலைமுடியதைக் கோதிப் போவாள்.
கைவிலங்கிட்ட ஆளாய் நானும்
வேலையை முடித்து வீடு
வந்ததும் இழுத்து இறுக்கி
இப்பவே வேணும் என்ற
மோகத்தீ எங்கு போச்சு.
ஞாயிறு இரு முறை என்ற கணக்கெல்லாம் பலவீனர்க்கு
குறி விரைத்த நேரமெல்லாம்
பெண்டாள முடிந்ததுண்டு.
சிறு பெண்கள் பருத்தத் தொடைகள்
சரியா முலை நங்கை கண்டால்
நெஞ்சு விம்ம கண்கள் தெறிக்க
கீழ் உதடு கடித்தவாறு
வெப்பத்தில் தவித்த இளமை
எனை விட்டுப் போயே போச்சு.
எது காமம்
மனதா? உடம்பா?
அல்லது
இரண்டும் தானா
உலகத்தின் உச்ச சுகமே எனை விட்டு எங்கே போனாய்..
களைத்தது மனதா? உடம்பா?
முற்பிறவி ஞானம் தானா
கவிதையை முடிக்க முடியாத திகைப்புடன்
அமர்ந்திருக்க
மெல்லெழுந்து மனைவி குடிநீர்
குடித்து விட்டு போனவள் வந்து
கவிதையைப் படித்துச் சிரித்தாள்.
நல்லபடி அனுபவித்தோம்..
நாணமற்று ஈடுபட்டோம்..
பணக்கார பயங்கள் இல்லை.
ஏழையாய் வாழ்ந்ததுமில்லை.
காற்றோட்ட வீடு வாசல்
பண்டிகைக்கு துணி, மணிகள் வெளியில் சுற்ற சொந்தவண்டி
பொய்யற்ற நண்பர்கள் கூட்டம்..
ஆயிரம் வாசகர் அன்பர்கள்..
இதற்கு மேல் குருவின் அன்பு..
அசையாத பிரேமை பண்பு
கவிதையாய் இரண்டு மக்கள்..
கவினுறு பண்பாளர்கள்..
சித்தரென உனை வணங்கும்
சங்கத் திருக்கூட்டம் கூடும்
வேறென்ன வேணும் பாலா
இதற்கும் மேல்குறையாய்ச் சொல்ல
வேம்பாக இருந்த வாழ்க்கை
கரும்பாக மாறிப்போச்சே
ஆதலினால் மானிடரே காதல் செய்வீர்
காதலினால் மானிடருக்கு கலவி உண்டாம்
கவியரசன் பாடல் மறந்துபோச்சா
காதலை முன்னே வைத்து
காமத்தை பின்னே சொன்ன
கவியரசன் பெரிய ஞானி
செல்லம்மாள் சுவைத்த போகி
காமமே வாழ்வு என்றால் உடல்
களைப்பு தான் மீதமாகும்
ஆறாத ரணமே போல
மோகத் தீ நெஞ்சிலிருக்கும்
அது செய்யும் நூறு கொடுமை
அழிந்தது அமைதியெல்லாம்..
ஆற்று நீர் வடிந்து போக
சேற்றினில் முளைக்கும் புற்கள்
யாரதை அங்கு நட்டார் ஏற்கனவே இருந்தது தானே
புற்களில் பூக்கும் பூக்கள்
காற்றினிலே லேசாய் ஆடும்
கண்டவர் வியந்து பார்க்க
நண்பனே அருமைக் கணவனே..
எழுத்துச் சித்தனே..
எந்தன் துணைவனே..
நீர்வடிந்து பூக்கள் பூத்த பருவத்தில் வாழுகின்றோம்
குறையேதுமில்லை கண்ணா.
ஆயினும் ஒன்று சொல்வேன்
என் காமமது எங்கே என்று
கேட்டதில் காமமுண்டு
வாசனை போகவில்லை
கவனம் வை இடறிடாதே
பெரும் கலவரத்தில் சிக்கிடாதே
பூப்போல நடந்து போனாள்
அவள் கட்டிலில் கிடக்கும்சப்தம்..
வாசனை உண்டா என்று
மனசில்லே தேடிக் கொண்டு
ஈசனை வேண்டி நின்றேன்
மறைமுக எதிரி கொல்ல
காமத்தில் தவிக்கும் நண்பா
என் நிகழ்காலத்தை உனக்குச் சொன்னேன்
மோகத்தீ அணைந்து போகும்
நாளுக்குக் காத்திருப்பாய்.
அது வாழ்வதில் கடைந்த வெண்ணை
ஞான ஆணுக்கு கிடைத்த பெண்மை.
நன்றி : "எழுத்துச்சித்தர்" பாலகுமாரன்..
காதல் வறுமை
இரண்டு பேர் காதலித்தால்
இரண்டு பேர் சினேகமாக இருந்தால்...
அன்பு வழிய நின்றால் ஊருக்குப் பொறுக்காது.
ஏனெனில் ஊர் என்பதில் வெகுசிலரே காதல் வயப்பட்டவர்கள்.
மற்றவரெல்லாம் காதல் வறுமையில் தவிப்பவர்கள்.
வறுமையில் உள்ளவருக்கு செல்வந்தரைக் கண்டால் எரிச்சல் தான் வரும்.
- பால குமாரன்





















