பாலகுமாரனின் கடித வழி பொக்கிஷங்கள்
எண்பத்தி ஆறு , எண்பத்தி ஏழுகளில் ஐயாவின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகி என்னை வசீகரித்து என்னை அவருக்குள் மூழ்கடித்திருந்த காலம்.
எண்பத்தி ஏழில் அவருக்கு கத்துக் குட்டியய், விடலைத்தனமாய் ஒரு கடிதம் எழுதி அதியும் மதித்து அவர் பதில் கடிதம் எனக்கு அனுப்பியது ஜன்ம சாபல்யம் அடைந்தது போல் அன்றைக்கு தோன்றியது.
இந்தக் கடிதத்தை என் பொக்கிஷங்களில் ஒன்றாக இன்றும் நான் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்
எண்பத்தி எட்டில் அவரை நேரில் பார்க்க ஒரு பேராசை. முன் அனுமதி பெறாமல் லாயிட்ஸ் ரோடு வீடு தேடி கண்டு பிடித்து சென்ற போது அவர் இல்லாத வெறுமையில் ஊர் திரும்பினேன்.
மறுமுறை கடிதம் எழுதி முன் அனுமதி கேட்க எண்பத்தி எட்டின் தீபாவளிப் பொழுதின் மாலையில் சந்திக்க அனுமதி கிடைக்க மரியாதை செலுத்த கையில் பழங்களுடன் சென்றேன்.
கண்டேன்.
வைரமுத்து சொன்னதைப் போல "எவ்வளவோ பேச எண்ணினேன். ஆனால் வார்த்தைகள் வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்த்து"
என் நிலை புரிந்த ஐயா என்னிடம் பேசி என்னை சகஜமாக்கினார்.
1990 இல் "இனிது இனிது காதல் இனிது" என்ற தலைப்பில் ஐயா ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு தொடர் எழுதி வந்தார்.
இந்த கட்டுரைத் தொடர் பற்றி ஓரிரு கடிதங்கள் அவருக்கு எழுதி இருந்தேன்.
தொடர் முடித்த போது 1991 இல் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தை இந்தத் தொடர் நூலாக வந்த போது அதன் முதல் பதிப்பில் பிரசுரித்தார்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் தானே கைப்பட ஒரு கடிதமும் எழுதினார்.
இதுவும் என் பொக்கிஷங்களில் ஒன்று.